வள்ளுவத்தில் வாய்மை !
உண்மை, வாய்மை,
மெய்ம்மை மூன்றுமே ஒன்று போல் தோன்றும்; ஆனால்
அவற்றுக்கிடையே பொருள் வேறு பாடு இருக்கிறது. இதைப் புரிந்து
கொண்டு ஒழுகுதல் மாந்தர்க்குச் சிறப்பைத் தரும் !
கதிரவன்
வானில் நிலை கொண்டிருப்பது உண்மை ! அதை உள்ளது உள்ளபடி அப்படியே எடுத்து உரைப்பது
வாய்மை ! கதிரவன் இல்லையேல் இவ்வுலகில் உயினங்களே இருக்க முடியாது
என்பது மெய்ம்மை !
வாய்மையைப்
பற்றி வள்ளுவர் பத்து குறள்களைப் படைத்து இருக்கிறார். யாருக்கும்
தீமை விளைவிக்காத செய்திகளை நாம் சொல்வதும் (01),
பொய்தான் என்றாலும் கூட அதனால் நன்மை விளையுமெனில், அதைச் சொல்வதும் (02), வாய்மையே என்கிறார் வள்ளுவர் !
மனதில்
இருப்பதை ஒளிக்காமல் உரைக்கும் செயல், தவமும் தானமும் செய்வதை விட உயர்வானது
(03) என்பது அவரது உயரிய நோக்கு.
அதே போல், மனிதன் தன் உடல் அழுக்கை நீரால் கழுவலாம்;
ஆனால் உள்ளத்து அழுக்கை வாய்மையால் தான் அகற்றமுடியும் (04) என்று அவர் இன்னொரு குறள் மூலம் உலகுக்கு
அறிவிக்கிறார் !
உலகத்தோரே ! யாம்
உய்த்து உணர்ந்தவற்றுள், வாய்மையைப் போல் சிறப்பித்துக் கூறும்
தன்மைகள் உள்ளவை வேறெதும் இவ்வுலகில் இல்லை (05)
என்று எத்துணை அழுத்தமாகப்ப் பத்தாவது குறளில் பகர்கிறார் நம் செந்நாப்
போதார் !
“வாய்மை” என்பதற்கு வள்ளுவரைப் போல் இலக்கணம் கூறுபவர்
வேறு யாரும் இருக்க முடியாது. தமிழ் மறை தந்த இத் தகவுடை அறிஞன்
வழியில் நடப்போம். நன்மைகளை அடைவோம் ! வாழ்க
வள்ளுவம் ! வாழிய செந்தமிழ் !
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
பாலு
இராமச்சந்திரன்.
(bramachandra83@gmail.com)
ஆட்சிமன்றக்குழு
உறுப்பினர்.
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.பி.2051,கும்பம்,(மாசி)01]
{13-02-2020}
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக